ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே ரேஷன் கடை கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்து, விற்பனை உதவியாளர் படுகாயமடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பொன்செய் கிராமத்தில் அரசு கட்டடத்தில், கீழையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. விற்பனையாளராக சித்ரா உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சவுரிராஜன், 62, தற்காலிக உதவியாளராக இருந்தார். நேற்று ரேஷன் கடை திறக்கப்பட்டு, வழக்கம்போல் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த போது, கூரையின் கான்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது. இது கடையில் இருந்த சவுரிராஜன் தலையில் விழுந்ததால், அவர் பலத்த காயமடைந்தார். தலையில் ரத்தம் சொட்டிய நிலையில், ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தரங்கம்பாடி வட்ட வழங்க அலுவலர் அனிதா, செம்பனார்கோவில் போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர். இந்த கட்டடம் கட்டி ஏழு ஆண்டுகளே ஆன நிலையில், கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.