நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இலங்கையில் தஞ்சம்
நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரியை சேர்ந்த செல்வமணி,42, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 29ம் தேதி, 9 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 1ம் தேதி நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளிப்பதாக 'வாக்கி டாக்கி' மூலம் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பழுதான படகை மீட்க, பட்டினச்சேரி மீனவர்கள் மூன்று விசைப்படகுகளில் கடலுக்குள் சென்றனர். கடலில் குறிப்பிட்ட பகுதியில் படகு இல்லாததோடு, வாக்கி டாக்கி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் கடல் நீரோட்டத்திற்கு தகுந்தாற்போல் பல பகுதிகளில் தொடர்ந்து தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், பழுதான படகு, காற்றின் திசையில் இலங்கை எல்லைக்கு இழுத்து செல்லப்பட்டதால், இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீட்டு அந்நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக, மீன் வளத்துறைக்கு தகவல் கிடைத்தது. மீனவர்களை படகுடன் மீட்டு நாகை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.