உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 20 காசு அதிகரிப்பு

முட்டை கொள்முதல் விலை 2 நாளில் 20 காசு அதிகரிப்பு

நாமக்கல்: வடமாநிலங்களில் தட்டுப்பாடு, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி முடிந்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை, 2 நாட்களில், 20 காசு உயர்ந்துள்ளது.நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த, 1ல் முட்டை கொள்முதல் விலை, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 4ல், 480 காசாகவும், நேற்று முன்தினம், 490 காசாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, மேலும், 10 காசு உயர்ந்து, கொள்முதல் விலை, 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில், 20 காசு உயர்ந்துள்ளது, பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்ழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி முடிந்துள்ளதால், தமிழகத்தில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில், முட்டை தட்டுப்பாடு காரணமாக, கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதிக்கு அதிக அளவில் ஆர்டர் வந்துள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ