திருமண மண்டபத்தில் 30 பவுன் ரூ.10 லட்சம் மொய் பணம் திருட்டு
ராசிபுரம், ராசிபுரம் பகுதியில், நேற்று நடந்த திருமண நிழ்ச்சியில், மணமகள் அறையில் இருந்து, 30 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் மொய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று காலை ராசிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீநிவாஸ், வெண்ணந்துார் அடுத்த அனந்தகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜவேலு மகள் அகிலா ஆகியோரது திருமணம் நடந்து முடிந்தது.நிகழ்ச்சிக்கு வந்த உறவினர் பெரும்பாலோனார் சென்றுவிட்டனர். அதன்பின், மணமக்கள் வீட்டார் சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, மணமகள் அறை திறக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கலைத்து போடப்பட்டிருந்தன.இதனால் சந்தேகமடைந்த மணமக்கள் குடும்பத்தார் பார்த்தபோது, பையில் வைத்திருந்த, 30 பவுன் தங்க நகை, 10 லட்சம் ரூபாய் மொய் பணம் ஆகியவற்றை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருமண மண்டபத்திற்குள் நோட்டமிட்ட மர்ம நபர்கள், மணகள் அறையில் யாரும் இல்லாதபோது கைவரிசை காட்டியது தெரியவந்தது.இதுகுறித்து, ராஜவேலு அளித்த புகார்படி, ராசிபுரம் போலீசார், மண்டபத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.