உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கலைமகள் சபா நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரத்தை சேர்ந்தவர் தேடப்படும் குற்றவாளி

கலைமகள் சபா நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரத்தை சேர்ந்தவர் தேடப்படும் குற்றவாளி

விழுப்புரம், மே 23 கலைமகள் சபா நிறுவன மோசடியில் தொடர்புடைய விழுப்புரம் நபரை, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்ட காவல் துறை செய்திக்குறிப்பு:கடந்த, 2006ல் கலைமகள் சபா என்ற நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, அசையா சொத்துகளை வாங்கி குவித்ததுடன், பணத்தை முதலீடு செய்தோருக்கு திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது. நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கலைமகள் சபா வழக்கு நிலுவையில் உள்ளது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இவ்வழக்கை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வள்ளலார் நகரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் பாஸ்கர் மீது, கலைமகள் சபா மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, பாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகவே உள்ளார்.இந்நிலையில், நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், பாஸ்கரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வரும், 26ம் தேதி காலை 10:30 மணிக்குள், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி