அங்கன்வாடி குழந்தைக்கு தொந்தரவு உதவியாளர் கைது; முதியவருக்கு வலை
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தறித்தொழிலாளியின், நான்கு வயது மகள், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். கடந்த, 6ல் குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளது. குழந்தையிடம், பெற்றோர் விசாரித்தபோது, அங்கன்வாடி மையத்தில் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். பின், சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, நேற்று அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டதும், அங்கு சென்ற குழந்தையின் பெற்றோர், அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளிப்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளனர். அவர்கள், திருச்செங்கோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு அங்கு சென்ற பெற்றோர் அளித்த புகார்படி, மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.இதில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 60; இவருக்கும், அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரியும் வெப்படையை சேர்ந்த சரஸ்வதி, 49, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை பார்க்க அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, நான்கு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரஸ்வதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முதியவர் தேவராஜை தேடி வருகின்றனர்.