மோகனுார் சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்ய அழைப்பு
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி, கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்க, புதிய ரக கரும்பு நடவு செய்ய, 50 சதவீத மானியத்தில், கோ-18009, கோ-14012, கோ-86032, கோ-11015, கோக்-13339 மற்றும் சி.ஓ.வி.,- 09356 போன்ற அதிக விளைச்சல் மற்றும் வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதலை சமாளிக்கும் தன்மையுள்ள, புதிய ரக விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. மேலும், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து, 4.5 அடி அகலப்பாரில் பருசீவல் நாற்றுகள், ஒரு பரு கரணை நடவு, அகலப்பார் நடவு முறை, சோகை பரப்புதல், சோகை துாளாக்குதல் ஆகியவற்றிற்கு, அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மானிய விலையில் உயிர் உரங்கள், ஆலையில் தயாரிக்கப்படும் பயோ கம்போஸ்ட் இயற்கை உரம் வழங்கப்பட்டு வருகிறது.விவசாய அங்கத்தினர்கள் அனைவரும் பதிவு செய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை, 2025-26ம் அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து அனைத்து மானிய பலன்களையும் பெற்று பயன்பெறலாம். விபரங்களுக்கு, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் மற்றும் கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.