மரவள்ளி கிழங்கிற்கு ஆதார விலை விவசாய சங்கங்கள் கோரிக்கை
நாமகிரிப்பேட்டை: மரவள்ளி கிழங்கிற்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என, விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ஜூலை 5-ம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகள் பேரணி நடத்துவது, 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவது, மரவள்ளி கிழங்குக்கு மத்திய,- மாநில அரசுகள் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி உணவு திருவிழாவை நாமக்கல் மாவட்டத்தில் நடத்துவது எனபன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தாலும், தமிழ்நாடு அரசு இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மரவள்ளி ஆதார விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, மரவள்ளி கிழங்கு ஆலை உரிமையாளர்களை அழைத்து பேசி, மரவள்ளிக்கு உண்டான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தர தமிழக அரசு முன் வர வேண்டும். இவ்வாறு கூறினார்.தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் உதயகுமார், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கவுதமன், தமிழ்நாடு-புதுச்சேரி நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கத்தின் ராஜ. வேணுகோபால், நாமகிரிப்பேட்டை உழவர் நல வளர்ச்சி மன்ற செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.