முத்தாளம்மன், காளியம்மன் கோவிலில் குண்டம் விழா
மோகனுார்:மோகனுார் அடுத்த மணப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மேலபேட்டபாளையத்தில் முத்தாளம்மன், சந்தியப்பன், காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா கோலாகலாக நடக்கிறது.அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் போடப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, அக்னி சட்டி எடுத்தும், தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று காலை, 6:00 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், நாளை மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.