மல்லசமுத்திரம் அருகே 1.7 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: தலைமறைவானவருக்கு வலை
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, காரில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்து, 1,750 கிலோ அரிசி, காரை பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையிலான பறக்கும்படை போலீசார் மற்றும் தனி ஆர்.ஐ., முருகேசன் ஆகியோர், நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு, மல்லசமுத்திரம் அருகே, பள்ளக்குழி பால் சொசைட்டி அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற, 'டாடா சுமோ' காரை சோதனைக்காக நிறுத்தினர். அப்போது, காரை ஓட்டி வந்தவர் சற்று துாரம் தள்ளி நிறுத்திவிட்டு ஓட முயன்றுள்ளார். அவரை வளைத்து பிடித்த போலீசார், காரை சோதனை செய்ததில், 50 கிலோ எடையுள்ள, 35 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில், 1,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரித்தபோது, காரை ஓட்டி வந்தவர், சேலம் மாவட்டம், சங்ககிரி, அரசிராமணியை சேர்ந்த ஜெகதீசன், 45, என்பதும், கன்னங் குறிச்சி பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, மல்லசமுத்திரத்தில் உள்ள, வீரமணி என்பவர் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது தெரியவந்தது.இதையடுத்து, 1,750 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜெகதீசனை நாமக்கல் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள வீரமணியை தேடி வருகின்றனர்.