சுப முகூர்த்த நாட்களால் குண்டுமல்லி கிலோ ரூ.700
ப.வேலுார் பரமத்திவேலுார் தாலுகாவில், பிலிக்கல்பாளையம், சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரமாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.தற்போது, முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள் வரிசை கட்டுவதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 320 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று, 700 ரூபாய், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 140 ரூபாய், 80 ரூபாய்க்கு விற்ற அரளி, 120 ரூபாய், 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 120 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற முல்லை, 600 ரூபாய்க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.