தனியார் பள்ளி வேன் டிரைவர் அடித்து கொலை; வாலிபர் கைது
ராசிபுரம்:ராசிபுரம் அருகே, தனியார் பள்ளி வேன் டிரைவரை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, புதுச்சத்திரம் வையநாயக்கனுாரை சேர்ந்த ராஜு மகன் விஜய், 48; தனியார் பள்ளி வேன் டிரைவர். பள்ளி வேன்
இவர், நேற்று காலை வழக்கம்போல் வேனில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, புதுச்சத்திரத்தில் இருந்து ஏளூர் வழியாக பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.ஏளூர் அகரம் பகுதி யில் ஒரு வளைவில் நிறுத்தி, மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சரக்கு ஆட்டோவை அரவிந்த், 22, வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது, விஜய், 'சிறிது நேரம் நிற்க முடியாதா' என, அரவிந்திடம் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அரவிந்த், பள்ளி வேன் டிரைவர் விஜயை கீழே தள்ளி காலால் கடுமையாக தாக்கினார்.இதை பார்த்த பள்ளிக் குழந்தைகள், பயத்தில் அலறினர். எனினும், அதையும் பொருட்படுத்தாமல் அரவிந்த் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், விஜய் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அரவிந்தை பிடித்து வைத்து, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பதற்றம்
இதுகுறித்து தகவலறிந்து வந்த விஜயின் உறவினர்கள், புதுச்சத்திரம், ஏளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆட்டோ டிரைவர் அரவிந்தை கைது செய்தனர். இறந்த விஜய்க்கு மகன், மகள் மற்றும் மனைவி உள்ளனர்.