மக்கள் குறைதீர் கூட்டம்: 340 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 340 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், குமாரபாளையம், கிழக்கு காலனியை சேர்ந்த தியாகராஜன் மகன் விஸ்வக் ஆதித்யாவுக்கு, 2,780 ரூபாய் மதிப்பில், காதொலி கருவி வழங்கினார். டி.ஆர்.ஓ., சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.