பாலிசி பெற்றவர் உயிரிழப்பு ரூ.37 லட்சம் இழப்பீடு உத்தரவு
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி, 52. இவர், 2023 பிப்ரவரியில், நாமக்கல்லில் உள்ள 'இன்டஸ்இண்ட்' என்ற தனியார் வங்கியில், வீடு கட்ட, 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடன் நிலுவையில் இருக்கும்போது இறந்து விட்டதால், கடனை ஈடு செய்யும் வகையில், வங்கி மூலமாகவே, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 1.69 லட்சம் ரூபாய்- செலுத்தி, ஐந்தாண்டுகளுக்கு, 35 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுள்ளார்.இந்நிலையில், 2023 மார்ச்சில், கண்ணுச்சாமி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீட்டு தொகை, 35 லட்சம் ரூபாய் பெற்றுத் தருமாறு, கண்ணுச்சாமியின் மகன் கிருபாகர், 28, வங்கியில் கேட்டார். இறந்தவர் ஏற்கனவே இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததால், இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனக் கூறி, அவர் கட்டிய பிரீமியம், 1.69 லட்சம் ரூபாய் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளது. இதையடுத்து, கிருபாகர், வங்கி மீதும், இன்சூரன்ஸ் நிறுவனம் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், 'இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை, 35 லட்சம் ரூபாயுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடு சேர்த்து, 37 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 9 சதவீத வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் வங்கியில் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.