உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடக்கக்கல்வி கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்

தொடக்கக்கல்வி கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில், மனு அளிக்க வந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், மாநில பொருளாளர் முருக.செல்வராசன் தலைமையில், நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது: எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின், பணி நிறைவு இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்திற்கு, மேலிட பரிந்துரையில் மாவட்டம் விட்டு மாவட்டம் நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்டு நிரப்பப்பட்டு உள்ளது என்று தெரிய வருகிறது.எருமப்பட்டி ஒன்றியத்தில், 10-க்கும் மேற்பட்ட இடைநிலை உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இரு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இதில், ஒரு காலியிடத்தை முறையான இடமாறுதல் கலந்தாய்வு இன்றி, முறையற்ற வகையில் நிரப்புவதால் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரிதும்பாதிக்கப்படுவர். மேற்கண்ட முறைகேடான, இடமாறுதல் செயல்முறை நடவடிக்கைகள் தமிழக அரசின் ஆசிரியர் இடமாறுதல் கொள்கைக்கு நேர் எதிரானதாகும்.எனவே, கொடிக்கால்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள, சட்டவிரோதமான இடமாறுதல் செயல்முறை நடவடிக்கைகளை ரத்து செய்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி உதவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்ததால் மனு அளிக்கவந்த ஆசிரியர்கள், கல்வி அலுவலக வளாகத்திலேயே சிறிது நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ