சொத்து தகராறில் தம்பி அடித்து கொலை அக்கா குடும்பத்தினர் மூவருக்கு தலா 10 ஆண்டு
குமாரபாளையம், சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த வழக்கில், அக்கா, மாமா அவரது மகன் என, மூன்று பேருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருச்செங்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம வேம்பன்காட்டுவலசை சேர்ந்த விவசாயி பழனிவேல்,37. இவருக்கு திருமணமாகவில்லை. இவரது அக்கா கலா, 47, பள்ளிப்பாளையம் அடுத்த தொட்டிப்பாளையம் கீழ்காலனியில் வசித்து வருகிறார். இவரது கணவர் சாந்தகுமார்,53, கல்லுாரியில் படிக்கும் மகன் பூபேஷ்,19. இவர்களுக்கு பணம் தேவை பட்டதால், வேம்பன்காட்டு வலசில், பூர்வீக சொத்தில், தன் பாகத்திற்கான பணத்தை, தம்பி பழனிவேலிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை.இந்நிலையில், 2019 மே 4ம் தேதி வேம்பன்காட்டு வலசில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கணவர் சாந்தகுமார், மகன் பூபேஷ் ஆகியோருடன் கலா வந்துள்ளார். அப்போது, தன் தம்பியிடம், பூர்வீக சொத்தின் மீது தனக்குரிய பணத்தை தரும்படி கேட்டார். வழக்கம் போல் பழனிவேல் தர மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சாந்தகுமார், கலா, பூபேஷ் ஆகியோர் பழனிவேலை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு, திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை நீதிபதி விசாரித்து, பழனிவேலை கொலை செய்த அக்கா கலா, மாமா சாந்தகுமார், அவர்களது மகன் பூபேஷ் என மூன்று பேருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.