மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.3.28 லட்சத்தில் நல உதவி
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 421 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து, உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட, 14 பயனாளிகளுக்கு, 3.28 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மேலும், தமிழக அரசின், 'நீர்நிலை பாதுகாவலர்' விருது பெற்ற, நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் காந்தியாவதி ரமேஷிற்கு, கலெக்டர் உமா பாராட்டு தெரிவித்தார். டி.ஆர்.ஓ., சுமன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் கிருஷ்ணவேனி, ஆர்.டி.ஓ., சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.