மக்கள் குறைதீர் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பில் நலத்திட்டம் வழங்கல்
நாமக்கல், குறைதீர் கூட்டத்தில், ஏழு பேருக்கு, 1.13 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 575 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில், ஒருவருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு, மாடு வளர்ப்பு கடனுதவிக்கு மானியம், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 27வது வார்டில் வசிக்கும், மூன்று பேரின் கூரைவீடு தீவிபத்தில் எரிந்து சாம்பலானதை அடுத்து, சமையல் பாத்திரங்கள் அடங்கிய வேட்டி, சேலை, போர்வை, கொசுவலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு பேருக்கு, பிரெய்லி கடிகாரம், விலையில்லா தையல் இயந்திரம் என, மொத்தம், ஏழு பேருக்கு, 1.13 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.