மக்கள் குறைதீர் கூட்டத்தில் 20 பேருக்கு ரூ.14.25 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 540 மனுக்கள் வரப்பெற்றன.அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, தாட்கோ மூலம், 13 பேருக்கு, 13.90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்டரிங், தையல் இயந்திரம், பயணியர் வாகனம் மற்றும் கறவை மாடு உள்ளிட்ட தொழில்கள் மேற்கொள்ள தொழில் கடனுதவி வழங்கப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பேருக்கு, சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல் என, மொத்தம், 7 பேருக்கு, 34,900 ரூபாய் என, மொத்தம், 20 பேருக்கு, 14 லட்சத்து, 24,900 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிப்காட் வருவாய் அலுவலர் சரவணன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.