கூடலுார்;முதுமலை, கூடலுார், மசினகுடி பகுதியில் நடைபெற்று வரும் யானைகள் கணக்கெடுப்பு பணியில், 290 வன ஊழியர்கள், 33 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.முதுமலை உள்ளிட்ட பிற புலிகள் காப்பகங்களில், ஒவ்வொரு ஆண்டும், பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை, 30 நாட்கள் தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.மேலும், ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு, தென் மாநில வனப்பகுதியில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது.கணக்கெடுப்பு பணிகளில், நேர்கோடு முறை, நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது, நீலகிரி மாவட்டத்தில், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, கூடலுார், நீலகிரி வனக்கோட்டங்களில், நேற்று காலை, 6:00 மணிக்கு யானைகள் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது.இதற்காக முதுமலை, கூடலுார், மசினகுடி வனப்பகுதிகள், 87 பிரிவுகளில், 290 வன ஊழியர்கள், 33 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியின் போது தென்படும் யானைகள் குறித்த விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இப்பணி, நாளை நினைவுபடுகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'கணக்கெடுப்பு பணியின் போது பதிவு செய்யப்படும் விபரங்களின் அடிப்படையில் யானைகள் எண்ணிக்கை குறித்து கணக்கீடு செய்யப்படும்,' என்றனர்.