உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை வழித்தடம் அழிப்பதால் மனித-விலங்கு மோதல் அபாயம்; குன்னுாரில் யானை தாக்கி ஆதிவாசி பலி

யானை வழித்தடம் அழிப்பதால் மனித-விலங்கு மோதல் அபாயம்; குன்னுாரில் யானை தாக்கி ஆதிவாசி பலி

குன்னுார்: குன்னுார் சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தில், யானை தாக்கி பழங்குடியினத்தை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.குன்னுார் சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் விஐயகுமார்,33. நேற்று முன்தினம் இரவு இவரும், ரவி என்பவரும், குன்னுாரில் இருந்து ஆடர்லி அரசு பஸ்சில் சென்றுள்ளனர். இரவு, 9:30 மணிக்கு வனப்பகுதி வழியாக வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த காட்டு யானை விஜயகுமாரை தாக்கியதில் உயிரிழந்தார். உடன் இருந்த ரவி மீண்டும் ஆடர்லி வந்து எஸ்டேட் பகுதியில் தங்கியுள்ளார்.இரவு முழுவதும் கணவர் வராததால் மனைவி சித்ரா அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். நேற்று காலையில் தேடி வந்த போது விஜயகுமார் யானை தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலின் பேரில் வனத்துறையினர், போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு அரசு சார்பில் வழங்கும், 10 லட்சம் ரூபாய்க்கான தொகையில் முதல் தவணையாக, 50 ஆயிரம் ரூபாயை வனத்துறையினர், சித்ராவிடம் வழங்கினர்.

தடம் மாறும் யானைகள்

குன்னுார் மலை பாதையில் பொக்லைன் பயன்பாடு, பாறை உடைக்க தடையிருந்தும், பணம் படைத்தவர்கள் பலர், இங்கு விதிமீறி, இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். குரும்பாடி அருகே மலைகள் குடைந்து இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. தற்போது, கே.என்.ஆர்., அருகே இரவு பகலாக சில வனத்துறையினர் ஆதரவுடன் விதிகளை மீறி காட்டு மரங்கள் வெட்டப்பட்டு, மூடப்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய விதிமீறல்களால் யானைகள் வழித்தடம் பாதிக்கப்பட்டு, அவை தடமாறி கிராம பகுதிகளுக்கு செல்கின்றன. இதனால், கோடையில் யானை- மனித -விலங்கு மோதல் குன்னுாரில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.எனவே, இப்பகுதியில் உள்ள யானை வழித்தடங்கள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை