நகரில் தஞ்சமடைந்த கரடி பொது மக்கள் அச்சம்: கூண்டு வைத்து பிடிப்பது அவசியம்
குன்னுார்;'குன்னுாரில், 5 நாட்களாக உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.குன்னுார் அருகே வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகள் வந்து செல்கின்றன. கடந்த, 13ம் தேதி தடம் மாறி வந்த கரடிகுட்டி டென்ட் ஹில். குன்னுார் பஸ் ஸ்டாண்ட். தீயணைப்பு துறை, ராஜாஜி நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பெட்போர்டு, பகுதிகளில உலா வந்தது. நாள்தோறும் ஒவ்வொரு இடத்தில் உறங்கி வருகிறது.இந்த கரடியை, 10 பேர் கொண்ட வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அந்தோணியார் பள்ளி மைதானம் அருகே மரத்தின் மீது ஏறி அமர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு இறங்கி சென்றது. அவ்வப்போது சாலை வழியாக சென்று புதர்களில் தஞ்சம் அடைகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர்.வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'கரோலினா பகுதியில் அதிகளவில் கரடிகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து, தடம் மாறி நகருக்குள் வந்த குட்டி கரடி தவித்து வருகிறது. தற்போது, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு அருகே அதிக முட்புதர்கள் சூழ்ந்த இடத்தில் தஞ்சமடைந்துள்ளது. கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில்,'' கரடி குட்டி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதி செல்கிறது. கண்காணித்து வருகிறோம். கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.