உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அடிக்கடி பூட்டி கிடக்கும் சுற்றுலா தகவல் மையம் பயணிகள் கடும் அதிருப்தி

அடிக்கடி பூட்டி கிடக்கும் சுற்றுலா தகவல் மையம் பயணிகள் கடும் அதிருப்தி

கூடலுார்;கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுலா தகவல் மையம், அடிக்கடி பூட்டி கிடப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக வந்து செல்கின்றனர். இவர்கள், சுற்றுலா தலங்கள் குறித்த விபரங்களை தெரிந்து, பயணத்தை தொடரும் வகையில், கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை புதிய கோர்ட்டு அருகே, சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, 2012, செப்., மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். துவக்கத்தில் முறையாக ஊழியர் நியமித்து செயல்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.தற்போது, இந்த மையம், முறையான பராமரிப்பு இன்றியும், அடிக்கடி பூட்டி கிடப்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை பெற முடியாத நிலை உள்ளது. மேலும், கட்டடம் பராமரிப்பின்றி உள்ளது. மையம் பூட்டி கிடக்கும்போது, அதன் வளாகத்தை 'பாக்கிங்' தளமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள, சுற்றுலா தகவல் மையம், அடிக்கடி பூட்டி கிடப்பதால், சுற்றுலா பயணிகள் சுற்றுலா தகவல் குறித்த தகவல்கள் பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சுற்றுலா மையத்தை, தொடர்ச்சியாக திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மைய வளாகத்தை முறையாக பராமரித்து, அங்கு வாகனங்கள் நிறுத்துவதையும் தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை