பழங்குடி மாணவர்கள் 33 பேருக்கு சிகிச்சை
கூடலுார்:கூடலுார் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்களில், 33 பழங்குடி மாணவர்களுக்கு, திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி செயல்படுகிறது. இங்கு, 99 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியின மாணவ, மாணவியர். பள்ளிக்கு நேற்று, 78 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில், பல மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதில், 33 மாணவர்களை சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.அதில், தலை, வயிற்று வலியால் அதிகம் உள்ள நான்கு மாணவர்கள், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில், ''உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த, 33 மாணவர்களும் நல்ல நிலையில் உள்ளனர். தலைவலி, வயிற்று வலி ஏற்பட்ட நான்கு மாணவர்கள் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவு உட்கொண்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,'' என்றார்.