உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு 47 டாக்டர்கள் நியமனம்! குறைப்பாடுகளை படிப்படியாக தீர்த்தால் பயன்

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு 47 டாக்டர்கள் நியமனம்! குறைப்பாடுகளை படிப்படியாக தீர்த்தால் பயன்

ஊட்டி; 'ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, 47 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறைப்பாடுகள் படிப்படியாக தீர்க்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில், கடந்த, 2022ம் ஆண்டு ஜன., மாதம் அரசு மருத்துவ கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து, 146.23 கோடி ரூபாய் நிதியில் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித்துறையினரும் இணைந்து மழை உட்பட பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கட்டுமானப் பணிகளை முடித்தனர். அதில், நாட்டில் மலை பிரதேசங்களில், 700 படுக்கைகள் கொண்ட முதல் அரசு மருத்துவமனையாக ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'எம்.ஆர்.ஐ., சி.டி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே' போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், 12 அறுவை சிகிச்சை அரங்கங்களும் உள்ளன.

குறைகள் என்ன?

ஊட்டி டவுனிலிருந்து மருத்துவமனைக்கு போதிய அரசு பஸ் வசதி இல்லை. நோயாளிகள் மினி பஸ்களை நம்பி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படவில்லை. மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள், அவர்களை அழைத்து வரும் உறவினர்கள் அமர நிழல் குடை வசதி இல்லாததால் வெயிலில் தடுப்பு சுவர் மீது அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல், மருத்துவ கல்லுாரி முன்பாக நகராட்சி சார்பில் நிழல் குடை வசதி இன்னும் ஏற்படுத்தவில்லை. மருத்துவ வார்டு பிரிவுகளில் அன்றாட மேற்கொள்ளும் பராமரிப்பு பணி மேற்கொள்வதில்லை.

முதற் கட்டமாக டாக்டர்கள் நியமனம்

மருத்துவ கல்லுாரிக்கான கட்டமைப்பு வசதிகள் நிறைவு பெற்றாலும், அதற்கான தொழில் நுட்பங்களை கையாளவும், மருத்துவ பரிசோதனைக்கு போதிய டாக்டர்கள் நியமிக்காததால் சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. 'குறிப்பாக, டாக்டர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,' என, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம், மேலதிகாரிகள் வாயிலாக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் கீதாஞ்சலி கூறியதாவது,''டாக்டர் காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், 47 டாக்டர்களை பணியமர்த்தியுள்ளனர். அவர்கள் படிப்படியாக சேர்ந்து வருகின்றனர். டாக்டர் உட்பட பிற பிரிவுகளின் பணியிடங்களும் படிப்படியாக நிரப்புவதாக அரசு தெரிவித்துள்ளது,'' என்றார்.

விரைவில் பேட்டரி கார் வசதி...

அரசு மருத்துவமனைக்கு பஸ் வசதி ஏற்படுத்த போக்குவரத்து கழகம் பல்வேறு காரணங்களை கூறி வருவதால், நோயாளிகள் ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகமும் பல முறை போக்குவரத்து கழகத்தை அணுகி முறையிட்டும் போக்குவரத்து கழகம் தட்டி கழித்துள்ளனர். இந்நிலையில், நோயாளிகளை அழைத்து செல்ல விரைவில், இரண்டு பேட்டரி கார்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை