அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி சிக்கினார் 8ம் வகுப்பு படித்த உதவி இயக்குனர்
ஊட்டி:அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி, 1 கோடி ரூபாய் வசூலித்து, போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஓரசோலை பகுதியை சேர்ந்தவர் மனோ, 40. இவர் கோத்தகிரி பேரூராட்சியில் உதவி இயக்குனராக உள்ளதாவும், உள்ளாட்சி துறை உட்பட சில அரசு துறைகளில் உதவியாளர் பணி உள்ளதாக தனக்கு அறிந்தவர்களிடம் கூறியுள்ளார். அந்த பணியில் சேர்த்து விடுவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, ஊட்டி, கோத்தகிரி, குன்னுாரை சேர்ந்த பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார். பணி கேட்டு தொந்தரவு செய்வோருக்கு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இந்நிலையில், அவர் கொடுத்த பணி நியமன ஆணையுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அவர்கள் சென்றபோது, அது போலி என்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை திருப்பி அளித்து விடுவதாக கூறியுள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சிலர், நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மோசடி குறித்து மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., நிஷாவை விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார் கோத்தகிரிக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு மனோவை கைது செய்தனர்.டி.எஸ்.பி. சக்திவேல் கூறுகையில், ''மனோ, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வேலை வாங்கி தருவதாக பணம் வசூல் செய்து, போலி பணி ஆணை, போலி மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார். இதுவரை, 1 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது தெரிய வந்தது. விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.