உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்: இளம் தலைமுறையினருக்கு அழைப்பு

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்: இளம் தலைமுறையினருக்கு அழைப்பு

குன்னுார்:''நவீன அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற நவீன துறைகளில் பயில இளைய தலைமுறையினர் அதிகளவில் முன்வர வேண்டும்,'' என, கல்லுாரி கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தாவரவியல் துறை, கணித துறை மற்றும் கம்ப்யூட்டர் துறை இணைந்து அறிவியல் மற்றும் சமூகம் என்ற தலைப்பில் நடந்தது.இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில கருத்தாளர் ராஜு பேசியதாவது:நடப்பாண்டின் தேசிய அறிவியல் தின கருப்பொருளாக, 'அறிவியலும்; சமுதாயமும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 150 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நமது நாட்டின் அறிவியல்; எழுத்தறிவை பிற நாடுகளை ஒப்பிடுகையில் நாம், 25 சதவீதமாக உள்ளோம். தென்கொரியா, சீனா போன்றவை, 75 சதவீதத்திற்கும் மேல் உள்ளன. போலி அறிவியல் வாதங்கள் நமது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. தற்போது அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை கற்க மாணவர்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை. நவீன அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற நவீன துறைகளில் இளம் தலைமுறையினர் பயில அதிகளவில் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.'லாங்வுட்' சோலை கண்காணிப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பெள்ளி பேசுகையில், ''இயற்கையை மாசுபடுத்துவதும், அழிப்பதும் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. அறிவியல் மாணவர்களாகிய நாம் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவை அனைவரும் பெற்றிருக்க வேண்டும் மற்றவர்களுக்கும் அதை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். தாவரவியல் துறை உதவி பேராசிரியை பிரவீனா வரவேற்றார். துணை பேராசிரியை ஷாஜிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி