ஊட்டியில் படகு போட்டி சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஊட்டி:ஊட்டியில் நடந்த படகு போட்டியில், சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடந்தது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதில், தம்பதியினர், பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக போட்டி நடந்தது.அதில், தம்பதியினருக்கான பிரிவில் பாண்டிச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார்- - மஞ்சமாதா; கோவாவை சேர்ந்த ஸ்டீபன்- - ராவன், கேரளாவை சேர்ந்த அல்தாப் - -ஷீகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்களுக்கான இரட்டையர் போட்டியில், கோவாவை சேர்ந்த ஜாக்லின்- - வர்ஷா; ஐதராபாதை சேர்ந்த சிவானி- - லாயா; கோவையை சேர்ந்த லியா- - ஜனனி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இதேபோல ஆண்களுக்கான பிரிவில் கேரளாவை சேர்ந்த சஜிஜான்-ஷாபி, முகமது சையது -சாண்டி, நோபல் சாண்டி-பஷீர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். போட்டியை திரளான சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.