தாவரவியல் பூங்கா திறப்பு; சுற்றுலா பயணிகள் வருகை
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டதால், கடும் குளிரிலும் சுற்றுலா பயணிகள், பூங்காவை கண்டுக்களித்தனர்.நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், 25 மற்றும் 26ம் தேதிகளில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. பாதுகாப்பு கருதி, முக்கிய சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. மழை சற்று குறைந்த நிலையில், சுற்றுலா மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்காக விடுக்கப்பட்டதால், மாவட்டம் முழுவதும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. நேற்று காலை மழை குறைந்ததால் தாவரவியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. ஊட்டியில் ஏற்கனவே தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.பூங்கா அதிகாரிகள் கூறுகையில்,' தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் மழையால் வாடிய நிலையில், பல இடங்களில், ஒரு லட்சம் புதிய மலர்களை கொண்டு மீண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. அதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்,' என்றனர்.