இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் செல்லாத கேரள அரசு பஸ்கள்
பந்தலுார்: பந்தலுார் வழியாக செல்லும் கேரளா மாநில அரசு பஸ்கள், இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாததால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பந்தலுார் வழியாக, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி, கல்பெட்டா, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கேரளா மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேரங்களில், பந்தலுார் பஜார் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பகுதிக்கு சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் கேரளா மாநில அரசு பஸ்கள், இரவு, 7:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டிற்குள், செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால், பஸ் ஸ்டாண்டிற்குள் அமர்ந்து, பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து கேரளா மாநில அரசு பஸ் டிரைவர்களிடம் பயணிகள் கேட்டால், முறையான பதில் கூறாமல், 'தங்கள் விருப்பம் போல் மட்டுமே, பஸ்கள் இயக்கப்படும்,' என, கூறுவதாக பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். எனவே, பகல் மற்றும் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்குள், கேரளா மாநில அரசு பஸ்கள் சென்று வர, போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.