கூட்டுறவு கடனுதவிகளை பயன்படுத்த அழைப்பு
ஊட்டி: எப்பநாடு கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. ஊட்டி அருகே எப்பநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கம் வாயிலாக உறுப்பினர்களுக்கு பயிர் கடன், கறவை மாட்டு கடன், மகளிர் குழுக்களுக்கான கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது, ''மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி என்னும் கொடுமையில் சிக்கி தங்களது சுயமரியாதை மற்றும் உழைப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மட்டுமே கடன் பெற வேண்டும். ''அவ்வாறு பெற்ற கடனை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தி தங்களது பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ''விவசாயிகளுக்கான எண்ணற்ற கடன் திட்டங்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ளன. விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.