கிறிஸ்துமஸ் பெருவிழா பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு
கூடலுார்; கூடலுாரில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா பேரணி சிறப்பாக நடந்தது.கூடலுாரில் தாலுகா ஐக்கிய கிறிஸ்துவ இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா பேரணி நடந்தது. தலைவர் அருட்தந்தை தாமஸ் வரவேற்றார். சி.எஸ்.ஐ., தேவாலய அருட்தந்தை அருள்பிரகாஷ் தலைமை வகித்தார். கூடலுார் பழைய கோர்ட் சாலையில், புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., வசந்தகுமார், மார்னிங் ஸ்டார் பள்ளி தாளாளர் அருட்தந்தை சனீஸ், புனித தாமஸ் தேவாலய அருட்தந்தை ஜோபி ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணி, பழைய கோர்ட் சாலை வழியாக சென்று, மார்னிங் ஸ்டார் பள்ளியில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த நற்செய்தி பெருவிழாவில், ஐ.ஆர்.எஸ்., உதவி கமிஷனர் சினுதாமஸ் பேசினார். திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர். ஐக்கிய கிறிஸ்துவ இயக்கத்தின் செயலாளர் சேகர் நன்றி கூறினார்.