பேரூராட்சி அலுவலகம் முன் தடுப்புச்சுவர் பணி நிறைவு; வாகனங்கள் பார்க்கிங் செய்ய முடியாமல் சிக்கல்
கோத்தகிரி : கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு, கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, மண் சரிவு ஏற்பட்டு, அலுவலகம் முன்பு, தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.இதனால், அலுவலக வளாகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடித்ததுடன், பிரதான சாலையிலும், வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, பல மாதங்களாக நடந்து, தற்போது, நிறைவடைந்தும், குழி நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், அரசு வாகனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் வாகனங்கள் உட்பட, பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களின் வாகனங்கள் அலுவலகம் முன்பு, நிறுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், பணி நிறைவடைந்து பல நாட்கள் கடந்தும், பொக்லைன் உதவியுடன் குழியை நிரப்புவதற்கு தேவையான மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனால், தான் இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாககூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில், 'இதற்கு மாவட்ட உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கி, இப்பணி நிறைவடையும் பட்சத்தில், குறிப்பிட்ட இடத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த முடியும். இப்பகுதிகளில் தொடரும் வாகன நெரிசல் தவிர்க்கப்படும்,' என்றனர்.