ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரக்கன்று வினியோகம்
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கு சென்று ஒரு மரக்கன்று வினியோகிக்கப்பட்டு வருகிறது.'பசுமை நீலகிரி-2024' திட்டத்தில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மாவட்ட வன அலுவலர் கவுதம் அறிவுரைப்படி, கோத்தகிரி ரேஞ்சர் ஷியாம் பிரகாஷ், 500 மரக்கன்றுகளை, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர் ராஜூவிடம் வழங்கினார்.இந்த மரக்கன்றுகள், கோத்தகிரி கேர்பெட்டா நடுஹட்டி, கடைக்கம்பட்டி, திம்பட்டி மற்றும் கடக்கோடு ஆகிய கிராமங்களில், வீட்டுக்கு ஒரு மரக்கன்று என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகிறது.'மரக்கன்றுகளை நடவு செய்த கிராம தலைவர்கள், அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,' என, உறுதியளித்தனர். இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் போஜராஜன், சோலை காடுகளின் பயன்கள் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர ராஜூ, மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.