குன்னுார் அருகே வீட்டில் தீ விபத்து; மாற்று திறனாளி கருகி பலி
குன்னுார்; குன்னுார் அருகே கரும்பாலம் பகுதியில், வீட்டில் தீப்பிடித்ததில், தேயிலை நிறுவன முன்னாள் மேலாளரான மாற்றுத்திறனாளி பலியானார். நீலகிரி மாவட்டம், குன்னுார் கரும்பாலம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் சேவியர், 54. தனியார் தேயிலை நிறுவன மேலாளராக பணியாற்றினார். இவருக்கு சர்க்கரை நோய் காரணமாக ஒரு கால் அகற்றப்பட்டுள்ள நிலையில், பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி லிட்வின், மகள் ஆகியோர் நேற்று காலை குன்னுாரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இவரின் வீட்டில் இருந்து காலை, 8:00 மணியளவில் புகை வருவது அறிந்து அருகில் இருந்தவர்கள், லிட்வினுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு துறை அலுவலகம் வந்த அவர், தகவல் அளித்தார். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அப்போது, படுக்கை அறையில், உடல் கருகிய நிலையில், டோமினிக் சேவியர் பலியாகி கிடந்தார். தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குன்னுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறுகையில்,'' அவரது வீட்டில் தண்ணீர் கொதிக்க வைக்க, வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில், படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தீ பரவி, அவர் தீயில் கருகி இருந்துள்ளதாக, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.