கோத்தகிரி அருகே துப்பாக்கியுடன் விலங்கு வேட்டை; ஐந்து பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
கோத்தகிரி; கோத்தகிரி கெராடா மற்றும் ஆடத்தொறை பகுதியில் விலங்கு வேட்டையில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காட்டேஜ்களில் சமவெளி மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் சுற்றுலா வந்து, அறை எடுத்து தங்கி வருவது வழக்கமாக உள்ளது.இவ்வாறு, தங்குபவர்களுக்கு சில காட்டேஜ்களில் உணவாக, மான், முயல், காட்டு பன்றி உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி தாராளமாக வழங்கப்படுவதாக புகார் உள்ளது. மேலும், சில விடுதிகளில் தங்குபவர்கள், இரவு நேரத்தில் வன விலங்குகளை வேட்டையாட செல்வதும் அவ்வப்போது தொடர்ந்து வருகிறது.இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, நீலகிரி வன கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், கெராடா மற்றும் ஆடத்தொறை பகுதியில், வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வன விலங்குகளை வேட்டையாடுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை கட்டப்பட்டு வனசரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கிகளை வைத்து முயல் உட்பட விலங்குகளை சிலர் வேட்டையாடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.விசாரணையில், 'கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, அக்ஷய், 28, அனுஸ்கா, 23, விக்னேஷ் நாயர், 29, ரோஹன் அட்சயா,28, மற்றும் சூரியகுமார்,27, ஆகிய ஐந்து பேர் வேட்டையில் ஈடுபட்டனர்,' என்பது தெரியவந்தது.அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த நான்கு வேட்டை துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு மான் கொம்புகள் மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். நேற்று காலை ஐந்து பேருக்கும், தலா, 2 லட்சம் வீதம், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
முகம் மறைக்கப்பட்டது ஏன்?
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில், வனக்குற்றங்களில் ஈடுபவர்கள் கைது செய்யப்படும் போது, குற்றவாளிகளின் போட்டோக்களை வனத்துறை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், கோத்திகிரி விலங்கு வேட்டையில் ஈடுபட்ட ஐந்து பேருடன், நான்கு வேட்டை துப்பாக்கிகள், தோட்டாக்கள், மற்றும் இரண்டு மான் கொம்புகள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. அது குறித்து தகவல்கள் மற்றும் 'போட்டோ'க்களை வனத்துறை வெளியிட்டது. அதில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் முகங்களும் மறைக்கப்பட்டு இருந்தன. எதற்காக குற்றவாளிகளின் முகங்கள் மறைக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் கேட்டும் பதில் கூறவில்லை. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது,' என்றனர்.