மரத்துக்கு ஏற்ப நிறம் மாறும் பறக்கும் ஓணான்; வியப்பில் வன உயிரின ஆர்வலர்கள்
கூடலுார்: கூடலுார் சாலையோர மரங்களில் தென்படும் நிறம் மாறும் அரிய வகை 'பறக்கும்' ஓணான் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.நீலகிரி மாவட்டம், கூடலுார் வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அதில், ஊர்வன வகையை சேர்ந்த, பறக்கும் ஓணான் சாலையோர மரங்களில், தென்பட துவங்கியுள்ளது.உயரமான மரத்திலிருந்து, தாழ்வான மரத்துக்கு பறந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, மரத்தின் நிறத்துக்கு ஏற்ப தன் உடல் நிறத்தை மாற்றுவது; ஓணான் பறந்து செல்லும் காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.வனஉயிரின ஆர்வலர் சுகுமார் கூறுகையில், ''பறக்கும் ஓணான், அழிவின் பட்டியலில் உள்ளது. இவைகளை சில இடங்களில் மட்டுமே பார்க்க முடியும். சிலர் இவைகளை விஷ ஜந்துக்கள் என நினைத்து அடித்து கொல்கின்றனர்.இங்குள்ள ஓணான்கள் விஷ தன்மை இல்லாதவை. அழிந்து வரும் இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. இது குறித்து பொதுமக்கள், மாணவர்களிடம் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,''என்றார்.