உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மலை ரயிலின் நான்கு புதிய பெட்டிகள்: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஓட்டம்

நீலகிரி மலை ரயிலின் நான்கு புதிய பெட்டிகள்: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஓட்டம்

குன்னுார்: ஊட்டி மலைரயில் சேவைக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட, 4 பெட்டிகளை கொண்டு நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணி பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2015ல் தென்னக ரயில்வே அமைச்சக அறிவுரைப்படி ஐ.சி.எப்., தொழிற்சாலையில் புதிய பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. '2019ல் முதல், 4 பெட்டிகள் சோதனை ஓட்டம் நடத்திய போதும், மலை சரிவுகளில் நடத்தப்படவில்லை,' என, ரயில்வே மீது இந்திய தணிக்கை மற்றும் கணக்காளர் அலுவலகம் ( சி.ஏ.ஐ.,) அறிக்கை வெளியிட்டது. அதில், '2020ல் புதிய பெட்டிகள் ஒவ்வொன்றும்,5 டன் எடை அதிகம் இருப்பதை சுட்டிகாட்டியும், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அனைத்து பெட்டிகளும் தயாரிக்கப்பட்டன. அதில், 15 பெட்டிகள் ரயில்வே வாரிய அனுமதியில்லாமல் வாரந்திர சிறப்பு ரயில்களுக்கு பயன்படுத்துவதாகவும், மற்ற பெட்டிகள், 3 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்படுத்தாமல் உள்ளன எனவும், இத்திட்டத்தில் 27. 91 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது,' எனவும் தெரிவித்துள்ளது. முன்மாதிரி பெட்டிகளை தயாரிக்க வலுவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பு ஆலோசனையின் பேரில், சோதனை ஓட்டத்திற்கு பிறகே துவங்க வேண்டும் எனவும் சி.ஏ.ஐ., அறிவுறுத்தியது. இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 4 புதிய பெட்டிகள் சோதனை ஓட்டம் நடந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார், ஊட்டி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் திருச்சி பொன்மலை பணிமனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மற்ற பெட்டிகளும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை