குப்பை கிளறும் காட்டெருமை பிளாஸ்டிக் உட்கொள்ளும் அபாயம்
குன்னுார்: குன்னுாரில் உணவு தேடி வரும் காட்டெருமைகள் குப்பைகளை கிளறி உணவு தேடி வருவதால், பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகள் குடியிருப்பு வளாகம் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிடுகின்றன. இதனால், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். தேயிலை தோட்டங்களில் பணியாற்று வோரும் அச்சத்தால் பசுந்தேயிலை பறிப்பதில் தொய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில், உணவு தேடும் காட்டெருமைகள் குப்பைகளை கிளறி, பிளாஸ்டிக் உடன் காணப்படும் உணவு கழிவுகளை உட்கொள்வதால், பிளாஸ்டிக், காட்டெருமைகள் வயிற்றில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வனத்துறையினர் கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.