பசுந்தேயிலைக்கு ரூ.20.80 விலை நிர்ணயம்
குன்னுார்: குன்னுார் தேயிலை மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில் வாரந்தோறும் தேயிலை துாள் ஏலம் விடப்பட்டு வருகிறது.தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில் பசுந்தேயிலைக்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியான தேயிலை துாள் நவ., மாதம் ஏலம் விடப்பட்டதன் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை, குன்னுார் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில்,''தேயிலை மார்க்கெட் கட்டுப்பாடு இரண்டாவது திருத்தம் அடிப்படையில், நவ.,மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ 20.80 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கடந்த ஜன., மாதம் தேயிலை துாள் கிலோவுக்கு,15 ரூபாய் என இருந்த நிலையில், கடந்த அக்., மாதம் விலை உயர்வு ஏற்பட்டு, 24.59 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது. தற்போது விலை, 3.80 ரூபாய் சரிந்தது.