உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூமியின் வெப்பத்தால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு: உலக சுற்றுச்சூழல் விழாவில் கருத்து

பூமியின் வெப்பத்தால் உணவு உற்பத்திக்கு பாதிப்பு: உலக சுற்றுச்சூழல் விழாவில் கருத்து

குன்னுார்: குன்னுார் கேத்தி லைட்லா மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் நலம் பேணும் வார விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் ருத்ர போர்ட் நெல்த்ராப் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது: வரும் நவ., 10ம் தேதி உலக சுற்றுச்சூழல் மாநாடு பிரேசிலில் நடக்க உள்ளதால், உலகளவிலான காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 2050ல், பூமியின் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் கூடுதலாகி, வெப்பநிலை மாற்றத்தால் அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படும். உலக அளவில் பட்டினி சாவு அபாயம் உள்ளதாகவும் கூறி, இதனை தவிர்க்க விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். புவி வெப்பத்திற்கு காரணமான, 'கார்பன் டை ஆக்சைடு' போன்ற பசுமை குடில் வாயுக்களில் மூன்றில் ஒரு பங்கு உணவு உற்பத்தி முறையில் தான் வெளிப்படுகிறது. எனவே, மீண்டும் ஒரு பசுமை புரட்சி உண்டாக்க வேண்டிய சவால் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, தாவர வகைகளை, 'சி3 மற்றும் சி4' என இரு வகைகளாக பிரித்துள்ளனர். 'சி4' வகையான தாவரங்கள் குறைந்த அளவு தண்ணீரில் உயிர் வாழும் தன்மை கொண்டவை. இவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை குடில் வாயுக்களின் அளவு மிகவும் குறைவு. இதனால், தற்போது விஞ்ஞானிகள், சி3 வகையான தாவரங்களை, சி4 வகையான தாவரங்களாக மாற்றும் முயற்சியில் பெருமளவில் வெற்றி கண்டுள்ளனர். விவசாய முறையில், 88 சதவீதம் நிலப்பரப்பை மிச்சப்படுத்தும். நவீன கண்டுபிடிப்புகள் வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியர் ரேஷ்மா நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் சுப்ரியா, அனுராதா உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ