உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேயிலை தொழிற்சாலைகளில் இலை வரத்து... அதிகரிப்பு! தினசரி கொள்முதல் 40 ஆயிரம் கிலோ எட்டியது

தேயிலை தொழிற்சாலைகளில் இலை வரத்து... அதிகரிப்பு! தினசரி கொள்முதல் 40 ஆயிரம் கிலோ எட்டியது

ஊட்டி:பரவலான மழைக்கு பிறகு நல்ல சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால், பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக அதிகரித்து, தினசரி கொள்முதல், 40 ஆயிரம் கிலோவை எட்டியதால் தேயிலை துாள் உற்பத்தி மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் நடந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் 'இன்கோசர்வ்' (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டில், 'கிண்ணக்கொரை, பிக்கட்டி, பிதர்காடு, கரும்பாலம், எப்பநாடு, கைக்காட்டி, மகாலிங்கா, மஞ்சூர், மேற்குநாடு, பந்தலூர், நஞ்சநாடு, பாண்டியார், கட்டபெட்டு, சாலிஸ்பரி, பிராண்யர், எடக்காடு, இத்தலார்,' உள்ளிட்ட, 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் பசுந்தேயிலையை வினியோகித்து வருகி ன்றனர். மூன்று ஷிப்ட்டில் தேயிலை துாள் உற்பத்தி நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அவ்வப்போது வெயில் தென்பட்டு நல்ல சீதோஷ்ண நிலை நிலவியதால் தேயிலை விவசாயிகள் உரமிட்டு தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். இதனால், இலை வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில நாட்களாக பெரும்பாலான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினசரி, 20 ஆயிரம் கிலோ முதல், 25 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இலை வரத்து, 30 ஆயிரம் கிலோ முதல், 40 ஆயிரம் கிலோவை எட்டியுள்ளது. மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் தேயிலை துாள் உற் பத்தியும் நடந்து வருகிறது. கூ ட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் அந்தந்த தொழிற்சாலைகளின் விற்பனையை பொறுத்து பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி , கிலோவுக்கு, 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. பொதுவாக இலை வரத்து அதிகரிக்கும் போது, பசுந்தேயிலைக்கான விலை குறைய வாய்ப்புள்ளது. வரத்து அதிகரித்ததால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் விலையில் முன்னேற்றம் இல்லாததால், பராமரிப்பு செலவுகளை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இழுத்தடிப்பதால் சிக்கல் சில தொழிற்சாலைகளை தவிர, பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் தொழிற்சாலை நிர்வாகம் சிக்கலில் திணறி வருகிறது. உறுப்பினர்கள் வினியோகிக்கும் இலைக்கு முன்பணம் மட்டும் வழங்கப்படுகிறது. 'செட்டில்மென்ட்' தொகை மாத கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், இலை வினியோகித்த உறுப்பினர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி

தொழிற்சாலை உறுப்பினர் ராமன் கூறுகையில், '' இலை வரத்து அதிகரிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், விலை குறைவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு தொழிற்சாலைகளை தாய் வீடாக கருதி இலை முழுவதையும் வினியோகித்து வருகிறோம். சரிவர பணம் தராததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளோம். சிறு விவசாயிகளின் பிரச்னைக்கு எந்த அரசும் செவி சாய்க்காததால் தேயிலை தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி