நான்கு மாதத்தில் 100 கட்டடங்களுக்கு சீல்: நீலகிரி மாவட்ட நிர்வாகம் அதிரடி
ஊட்டி: நீலகிரியில் கடந்த நான்கு மாதங்களில் விதி மீறி கட்டப்பட்ட, அனுமதி பெறாத, 100 கட்டடங்களுக்கு 'சீல்'வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாக இருப்பதால், அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை தடுப்பதற்கும், 1993ல் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டு கட்டுமான பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும், இங்கு விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், வீடுகளை விதிகளை மீறி காட்டேஜ்களாக கட்டப்பட்ட கட்டடங்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்துள்ளது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில், வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வு செய்து விதி மீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி படிப்படியாக ' சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோத்தகிரி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ பாண்டியன் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், மற்றும் வி.ஏ.ஓ., ஹேமலதா ஆகியோர் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட, 8 கட்டடத்திற்கு ' சீல்' வைத்தனர். அதிகாரிகள் கூறுகையில், ' ஐகோர்ட் உத்தரவுப்படி, மாவட்டத்தில், வருவாய், நகராட்சி, சுற்றுலா வளர்ச்சி கழகம் என, மூன்று துறைகள் இணைந்து, அனுமதியில்லாமலும், விதிகளை மீறி, வர்த்தக ரீதியாக சுற்றுலா காட்டேஜ்களாக செயல்படும் கட்டடங்களை அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில், 100 கட்டடங்களுக்கு 'சீல்'வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. விதிமீறிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ' சீல்' வைக்கும் பணி தொடர்கிறது. ' என்றார்.