யானை தாக்கி நீலகிரி நபர் மரணம் கோவையில் முதியவர் படுகாயம்
நீலகிரியில், காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், கோவையிலும் யானை தாக்கி முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி வனக்கோட்டம், கெத்தை வனத்தை ஒட்டி, பென்ஸ்டாக் அருகே தனியார் பண்ணை வீட்டில், ஆந்திர மாநிலம், பேர்லி சுகந்த ராவ், 35, என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:20 மணிக்கு, பண்ணையை ஒட்டி யானை வந்தது. அங்கு சென்ற பேர்லி சுகந்தராவை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். வனத்துறையினர் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம், நரசீபுரம் கிராமத்தில், நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு கார்த்தி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, வேலி, காரை சேதப்படுத்தி ஊருக்குள் புகுந்தது. வீட்டின் முன், பூ பறித்து கொண்டிருந்த சந்திரகிரி, 93, என்பவரை கீழே தள்ளி, மிதித்ததில் முதியவர் படுகாயமடைந்தார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டதில், யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, நரசீபுரம் சாலையில் காலை, 9.30 மணியளவில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பேரூர் தாசில்தார் சேகர், டி.எஸ்.பி., சிவகுமார் பேச்சு நடத்தினர். சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரியும், 14 ஒற்றை யானைகளை பிடித்து, இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, மாவட்ட வன அலுவலர் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்தனர். இதனால் அப்பகுதியில், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. - நமது நிருபர் குழு -