காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு; 60 குண்டுகள் முழங்க மரியாதை
ஊட்டி : ஊட்டியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்., 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, ஊட்டியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அதில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.அப்போது, போலீசார், 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின், துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, போலீசார் தங்களது சீருடைகள் மற்றும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். டி.எஸ்.பி.,கள் பாஸ்கர், முத்தரசு, நமச்சிவாயம், யசோதா உட்பட பலர் பங்கேற்றனர். நடப்பாண்டு பணியின் போது மொத்தம், 213 போலீசார் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.