ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டம் ; தன்னார்வலர்களுக்கு அழைப்பு
கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புவி வெப்பத்தால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், அதிக எண்ணிக்கையிலான புயல்கள், பெருவெள்ளம், அதிக வெப்பம் போன்ற அதீத காலநிலை மாற்றத்தை நாம் சந்தித்து வருகிறோம். இந்த சூழலில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 'காலநிலையை மீட்டெடுப்போம் -பசுமை நீலகிரி-2024' என்ற திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்தில் நடுவதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் குறித்து, அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் திட்ட இயக்குனர் ராஜூ கூறுவதாவது:இத்திட்டத்தில், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பசுமை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என, அனைவரின் ஒத்துழைப்போடு இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஒருவருக்கு ஒரு மரம், ஒரு விவசாயிக்கு ஐந்து மரம், ஒரு கிராமத்திற்கு, 500 மரங்கள் வழங்கி, அதனை நட்டு பாதுகாப்பாக வளர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் மற்றும் எஸ்டேட்டுகள் போன்ற அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான விரிவான திட்டம் உள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, அனைத்து பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் இணைய விரும்பும் தன்னார்வலர்கள், 94533 17439 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.