தாசில்தார் அலுவலக அறையில் ஒருவர் மரணம்
பந்தலுார்; பந்தலுார் தாசில்தார் அலுவலகத்தில் 'சர்வேயராக' வேலை செய்தவர் பிலிப்ஸ். இவர், தற்போது கோத்தகிரி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தனது எஸ்.ஆர்., புத்தகத்தை வாங்குவதற்காக, சேலத்தை சேர்ந்த அவரது உறவினர் ராஜா,58, என்பவருடன் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். காலதாமதம் ஆனதால் இரவு தாசில்தார் அலுவலக ஒரு அறையில் இருவரும் தங்கி உள்ளனர்.நேற்று காலை ராஜா உணவு அருந்திவிட்டு அறையில் படுத்து உறங்கி உள்ளார். மாலை சென்று பார்த்த போது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தார் சிராஜூநிஷா தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில், உடலை மீட்டு பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பிலிப்சிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.