வாசகர்கள் கருத்துகள் ( 2 )
How can we call ourselves a developed nation when people are not getting basic drinking water.Water is more important than airports flyover rockets bullet trains
அடடே டெல்லி ஜல்ஜிவன் ஆளுங்களுக்கு தந்தி அடிங்க
பந்தலுார்: பந்தலுார் அருகே போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், மாநில முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளனர். பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போத்துக்கொல்லி பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளது. அதில், 15 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேட்டுப்பாக்கான பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு மூலம் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டு உள்ளது. இங்குள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், வீடுகள் கட்டி, நடைபாதை அமைத்த போது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் குழாய்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, குழாய்கள் பொருத்தி குடிநீர் வழங்க, ஊராட்சி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த கிராமத்தை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தபோது, அவரிடமும் பழங்கியின மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக கூறி இடங்களையும் காண்பித்தனர். அதிலும் தீர்வு கிடைக்காத நிலையில், தாழ்வான பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து சிறிதாக வரும் தண்ணீரை பிடித்து சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. தற்போது, மழை பெய்வதால் தண்ணீரை சுமந்து செல்லும்போது சிலர் வழுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை ஒட்டி வனத்துறை மூலம், கட்டப்பட்ட குடிநீர் தொட்டியும், ஐந்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தங்களின் குறைகள் குறித்து, மாவட்ட கலெக்டரிடம் நேரில் கூறியும் தீர்வு கிடைக்காத நிலையில், தண்ணீருக்காக தவம் இருக்கும் சூழலுக்கு மண்ணின் மைந்தர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். கிராம மக்கள் கூறுகையில்,'கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்யும் கிணறு எங்கு உள்ளது என்று தெரியாத அளவிற்கு, புதர்கள் சூழ்ந்து மாசடைந்து உள்ளது. அந்த தண்ணீரை கூட எங்களுக்கு வினியோகம் செய்யாமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. மண்ணின் மைந்தர்களான எங்களை மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பது போன்று உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வரின் தனிப்பிரிவுக்கு பழங்குயினர் சங்கம் வாயிலாக மனு அனுப்பி உள்ளோம்,'என்றனர்.
How can we call ourselves a developed nation when people are not getting basic drinking water.Water is more important than airports flyover rockets bullet trains
அடடே டெல்லி ஜல்ஜிவன் ஆளுங்களுக்கு தந்தி அடிங்க