மகன்களை ராணுவத்தில் சேர்த்ததற்காக வெள்ளி பதக்கம்; குறை தீர்க்கும் கூட்டத்தில் பரிசு
ஊட்டி ; இரண்டு மகன்களை ராணுவத்திற்கு அனுப்பியதற்காக, மாநில அரசின், 12 கிராம் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நல நிதியிலிருந்து, ஒரு பயனாளிக்கு வீட்டு வரி சலுகை மானிய தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. தனது இரண்டு மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிய போஜன் என்பவருக்கு, மாநில அரசின், 12 கிராம் மதிப்புள்ள வெள்ளி பதக்கம் மற்றும் ராணுவ பணி ஊக்க மானியமாக, 25 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடமிருந்து, 165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 'பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.