உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறு விவசாயிகளுக்கு செட்டில்மென்ட் தொகை வராததால் கடும் நெருக்கடி!தீபாவளியை சிறப்பிக்க கைகொடுக்குமா கூட்டுறவு நிர்வாகம்?

சிறு விவசாயிகளுக்கு செட்டில்மென்ட் தொகை வராததால் கடும் நெருக்கடி!தீபாவளியை சிறப்பிக்க கைகொடுக்குமா கூட்டுறவு நிர்வாகம்?

ஊட்டி:நீலகிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு சிறு விவசாயிகள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கான பணத்தை வழங்குவதில் தாமதம் செய்வதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோ சர்வ்' (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டின் கீழ், 'மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, கைக்காட்டி, மகாலிங்கம், எப்பநாடு, கரும்பாலம், சாலிஸ்பரி,' உள்ளிட்ட, 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில், 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் இலையை அந்தந்த கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில், 40 சதவீதம் பேருக்கு, தொழிற்சாலைகளில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால், உறுப்பினர்கள் பலர், தனியார் தொழிற்சாலைக்கும் பசுந்தேயிலையை வினியோகித்து வருகின்றன. கடும் நெருக்கடியில் விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் நாள்தோறும், 25 ஆயிரம் கிலோ முதல், 40 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யும் இலையை அரைக்கும் அதிநவீன மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேயிலை துாள் விற்பனையும் நடந்து வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக உறுப்பினர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கு முறையாக 'செட்டில்மென்ட்' பணம் வழங்காமல், மூன்று மாதம் காலமாக பல கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன. இதனால், சிறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.கூட்டுறவு தொழிற்சாலையை தவிர்த்து, தனியார் தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் எதிர்பார்த்த அளவு இலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் சங்கம் மனு மாவட்டத்தில், 'இத்தலார், மேற்கு நாடு, மகாலிங்கம், கிண்ணக்கொரை, எப்பநாடு, கரும்பாலம்,' உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் கடந்த மூன்று மாதமாக செட்டில்மென்ட் தொகை நிலுவையில் வைத்துள்ளனர். இம்மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தொகை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் சிறு விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர். நெலிகோலு சிறு விவசாயிகள் சங்க தலைவர் ராமன் கூறுகையில், ''மாவட்டத்திலுள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மூன்று மாதங்களுக்கு மேலாக செட்டில்மென்ட் தொகை வழங்கப்படாமல் இழுத்தடித்து வருகின்றனர். 2 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது. தேயிலை வாரியம் அறிவித்த விலையும் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் முறையாக வழங்கப்படாததால், அதுவும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்று (நேற்று) மாவட்ட கலெக்டரை சந்தி த்து சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை